திருச்சி செய்திகள்
அழிவின் விளிம்பில் பெரம்பலுார் ரஞ்சன்குடி கோட்டை
1,000 ஆண்டு பொக்கிஷத்தை பாதுகாக்குமா தொல்லியல் துறைக்கு கோரிக்கை
திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலுாரில் இருந்து, 18 கி.மீ., துாரத்தில் சாலையின் இடதுபுறம் அமைந்துள்ளது மங்கலமேடு கிராமம். இங்கிருந்து, அரை கி.மீ.,யில், வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டை உள்ளது.
ரஞ்சன்குடி கிராமத்தில் கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் இக்கோட்டை, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
கோட்டை பற்றிய முழு வரலாறு இதுவரை கண்டறியப்படவில்லை. பிரெஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் 1751ல் நடந்த போரில், ஆங்கிலேயர்கள் தோல்வி அடைந்தனர்.
ஜாகீர்தாரர்கள் இக்கோட்டையை தலைமையிடமாக்கி ஆட்சி செய்ததும், பின் சந்தாசாகிப் என்ற மன்னன், ஆட்சி செய்ததாக வரலாற்று தகவல்கள் உள்ளன. கோட்டையின் வெளிப்புற சுற்றுச்சுவர்கள், வேலுார் கோட்டை போன்று காணப்படுகிறது.
மலைக்குன்றின் மேல் அமைந்துள்ள இக்கோட்டையை சுற்றிலும், எதிரிகள் ஊடுருவாமல் இருக்க, அகலமான அகழி அமைக்கப்பட்டுஉள்ளது. 44 ஏக்கர் கோட்டையின் மேல்புற தோற்றம், செஞ்சிக்கோட்டை போல கம்பீரமாக காட்சி தருகிறது.
கோட்டையை சுற்றி உயர்ந்து நிற்கும் மதில் சுவரின் நான்கு புறங்களிலும் இடையிடையே பீரங்கி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டைச் சுவர்களில், பாண்டி நாட்டுக்கான மீன் சின்னங்கள், போர்வாள்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கோட்டையின் மேல்புறத்தில், ராணியின் அந்தப்புரத்தை ஒட்டி, நீச்சல் குளம் அமைக்கப்பட்டுஉள்ளது. மேற்புற கோட்டையில், ஆயுத கிடங்கு, போர் காலங்களில் தப்பி செல்ல சுரங்கப்பாதை போன்றவை வியப்பூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கோட்டையின் உட்புறம் மசூதி, அதன் அருகிலேயே சிவன், விநாயகர் சிலைகளும் உள்ளன.
இந்த கோட்டையில் இருந்து, ஏராளமான பழங்கால வரலாற்று நாணயங்கள், பீரங்கி குண்டுகள் அக்கால மன்னர்களின் பயன்பாட்டு பொருட்கள் கிடைக்க பெற்று, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பெருமை வாய்ந்த இந்த நினைவுச்சின்னம், இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
சமீபமாக இக்கோட்டை சமூக விரோதிகளின் கூடாரமாகவும், காதலர்களின் அந்தப்புரமாகவும் மாறி வருகிறது.
கோட்டையின் படிக்கட்டுகள் உட்பட பல இடங்களில் கற்கள் மற்றும் சுவர்கள் பெயர்ந்து வருகின்றன. கோட்டையின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் மற்றும் செடிகள் முளைத்துள்ளன.
கோட்டை நுழைவாயில் பகுதிகள், திறந்தவெளி மதுக்கூடமாகவும், திறந்த வெளி கழிப்பறையாகவும் உள்ளன.
இவை, சுற்றுலா பயணியரை முகம் சுளிக்க வைக்கின்றன. பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் இங்கு துப்புரவு பணிகளும் செய்வதில்லை.
கோட்டையின் நுழைவாயில் பகுதியில் உள்ள சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், சுவரை சுற்றிலும் குளம் போல மழைநீர் தேங்கி நிற்கிறது. மதில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு, சிதிலமடைந்து வருகின்றன.
வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டையை புனரமைத்து பாதுகாக்க வேண்டும். குடிநீர், சாலை, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
பாதுகாவலர்கள், துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என, இந்திய தொல்லியல் துறைக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கு, வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb
2025-01-25