காதல் விவகாரத்தில் கோஷ்டி மோதல் : 6 பேருக்கு கத்திக்குத்து ஒருவர் கொலை

திருச்சி, திருவானைக்காவல் அருகே, திருவளர்சோலையைச் சேர்ந்தவர் விக்னேஷ், 24, பெட்டிக்கடை வைத்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன், திருவளர்சோலையில் பழக்கடை வைத்துள்ளார்.
விக்னேஷின் உறவினர் பெண்ணை, நாகேந்திரன் காதலிப்பது தொடர்பாக, அவர்களுக்குள் முன் விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு நாகேந்திரன், அவரது நண்பர் ஜீவானந்தம் ஆகியோர் விக்னேஷுடன் தகராறு செய்தனர்.
அதன்பின், நாகேந்திரன், ஜீவானந்தம், அவரது நண்பர்களான நெப்போலியன், 29, கதிரவன், 34, சங்கர்குரு, 35, கமலேஷ், 18, ஆகியோர், விக்னேஷ் வீட்டுக்குச் சென்று தகராறு செய்தனர்.
அப்போது, விக்னேஷ் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரண்டதால், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. கட்டை, கல், கத்தி போன்ற ஆயுதங்களால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், நாகேந்திரன், ஜீவானந்தம், நெப்போலியன், கதிரவன், சங்கர்குரு, கமலேஷ் ஆகியோர் காயமடைந்தனர்.
ஸ்ரீரங்கம் மருத்துவமனையில், நெப்போலியன் இறந்தார். கதிரவன் உட்பட இருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நெப்போலியன் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். நேற்று காலை, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி, நெப்போலியன் உறவினர்கள் கல்லணை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தினர்.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மறியல் நீடித்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் போலீசார், விக்னேஷ், எசனக்கோரையைச் சேர்ந்த மனோஜ் உட்பட சிலரை பிடித்து விசாரிக்கின்றனர்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HPjZpwnd79T8IWzIKDkm8k