திருச்சியில் 3 இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள்

திருச்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 3 இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக துரை வைகோ எம்பி உறுதியளித்தார்.
திருச்சி மாவட்டத்தில் மேலக்கல்கண்டார் கோட்டை மஞ்சத்திடல் ரயில்வே மேம்பாலம், திருவெறும்பூர் மேலகுமரேசபுரம் ரயில்வே மேம்பாலம், இனாம்குளத்தூர் ரயில்வே மேம்பாலம் ஆகிய 3 பிரதான கோரிக்கைகள் தொடர்பாக அந்த இடங்களை எம்பி பார்வையிட்டார். பின்னர் மனு அளித்த மக்களிடம் கலந்துரையாடினார். பின்னர் துரை வைகோ எம். பி கூறியதாவது:-
திருவெறும்பூரில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க வேண்டும். கொரோனா காலத்திற்கு முன்பு நிறுத்தப்பட்ட ரயில்களை சமுத்திரம் ரயில் நிலையத்தில் மீண்டும் நிறுத்த வேண்டும். ஸ்ரீரங்கம் வட்டம் கோவிலூர் மற்றும் நந்தவனம் பகுதிகளில் மூடப்பட்ட ரயில்வே கேட் அருகில் சாலைகள் இணைப்பு குறித்தும் மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் நான் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறேன்.
திருச்சி மாவட்டத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் தாமதமாகி வருகிறது.
இருப்பினும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மெட்ரோ ரயில் திட்டத்தை திருச்சிக்கு கொண்டு வர நான் நிச்சயம் உறுதுணையாக இருப்பேன்.
மேலகுமரேசபுரத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அருகில் உய்யக்கொண்டான் வாய்க்கால் செல்வதால் அதற்கான வாய்ப்பு இல்லை. அதற்கு பதிலாக ரயில்வே மேம்பாலம் அமைக்க சாத்திய கூறுகள் இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே 3 இடங்களில் மேம்பாலம் அமைப்பதற்காக தொடர்ந்து வலியுறுத்தி பணிகளை தொடங்க நான் உறுதுணையாக இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....