திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் வந்தடைந்தது. விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்தஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவரது உடமைகளை சோதனை செய்தனர்.

இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் தனது உடமையில் மறைத்து எடுத்து வந்த வெளிநாட்டு வனவிலங்கு இனங்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதுமட்டுமல்லாமல் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து கொண்டு வரப்பட்ட 55 பல்லி மற்றும் ஓணான் வகைகளை பறிமுதல் செய்ததுடன், அதனை கடத்தி வந்தது எப்படி என சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு எதற்காக அந்த விலங்குகள் கடத்தி வரப்பட்டது என்பது தொடர்பாகவும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வனவிலங்கு இனங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க உள்ளனர்.