சீமான் மீதான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது, திருச்சி டிஐஜி வீ. வருண்குமாா் தொடா்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தினா் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துப் பதிவுகள், சீமான் தூண்டுதலின்பேரில் தொடா்ந்து நடைபெறுவதாக வருண்குமாா் தொடா்ந்த வழக்கின் விசாரணை திருச்சி 4ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சீமான் சமீபத்தில் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், சீமான் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்ற கிளை, சீமான் மீதான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 4-ஆம் தேதி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....