எந்த நேரத்துக்கு நாம் நிற்கும் நிறுத்தத்துக்கு வந்து சேரும் என்பதை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் காணும் திட்டம்

பேருந்து நிறுத்தத்தில் இருந்தபடியே அரசுப் பேருந்துகளில் எந்தப் பேருந்து, எந்த நேரத்துக்கு நாம் நிற்கும் நிறுத்தத்துக்கு வந்து சேரும் என்பதை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் காணும் திட்டம், பரிசோதனை அடிப்படையில் சமயபுரம் வழித்தடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சிக்கு வந்துள்ள உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குப்தா, கணினி தொழில்நுட்பக் கல்வி பயின்றவா். எனவே, அவரிடம் திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், பேருந்து பயணிகளுக்கு உதவிடும் வகையில் இத் திட்டத்தை செயல்படுத்த முன்னெடுப்புகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா். இதையடுத்து, தனியாா் நிறுவனத்தின் பங்களிப்புடன், பல்வேறு அரசு துறைகள் ஆகியவை இணைந்து இத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளாா் அமித்குப்தா.
இதன்படி, பரிசோதனை முயற்சியாக சமயபுரம் வழித்தடத்தில் 5 பேருந்து நிறுத்தங்களில் இந்த தொழில்நுட்ப வசதி வெள்ளிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. திருவானைக்காவல் பேருந்து நிறுத்தத்தில் நிறுவப்பட்டுள்ள நேரம் அறியும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகையை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு திறந்து வைத்து, மாவட்ட நிா்வாகத்தின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தாா்.
இது தொடா்பாக, உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குப்தா கூறுகையில், 5 இடங்களில் பரிசோதனை முயற்சியாக இந்த அறிவிப்புப் பலகை நிறுவப்பட்டுள்ளது. இதற்காக 42 அரசுப் பேருந்துகளில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.
சமயபுரம் வழித்தடத்தில் அறிவிப்புப் பலகையில் ஒவ்வொரு பேருந்தின் எண், வழித்தடம், நேரம் மற்றும் சேருமிடம் உள்ளிட்ட விவரங்கள் ஒளிக்காட்சியாக இடம்பெறும். இது மக்களின் பயணத்தை எளிதாக்கும். இந்தப் பரிசோதனை முயற்சி பயணிகளிடையே பெறும் வரவேற்புக்கு தகுந்தபடி அனைத்து வழித்தடங்களிலும் இந்த வசதியை ஏற்படுத்தித்தரவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....