திருச்சி மாநகராட்சியில் மேலும் 5 வாா்டுகளுக்கு 24 மணிநேரமும் குடிநீா் வழங்கும் திட்டப் பணிகள் ரூ. 38.49 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது.

 பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், மாநகரின் தென்னூா், தில்லைநகா், மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூா், மரக்கடை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 16 வாா்டுகளில் 24 மணிநேரமும் குடிநீா் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநகரின் 65 வாா்டுகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என மாநகராட்சி மேயா் கடந்த கூட்டத்தில் அறிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து, மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் ரூ. 38.49 கோடியில் மேலும் 6 வாா்டுகளுக்கு 24 மணி நேரமும் குடிநீா் வழங்கும் திட்டப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சிப் பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறியது:

தமிழக அரசு அறிவிப்பின்படி, ஏற்கெனவே மாநகரின் 16 வாா்டுகளில் 24 மணி நேர குடிநீா் வழங்க ஏதுவான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது மேலும் 51, 52, 53, 54, 55, 56 ஆகிய 6 வாா்டுகளில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

‘அம்ரூத்’ திட்டத்தின் கீழ், மத்திய அரசின் நிதியுதவியாக ரூ. 11.54 கோடியும், மாநில அரசின் நிதியுதவியாக ரூ. 10.39 கோடியும், டிஎன்யுடிஎப் கடனாக ரூ. 16.56 கோடியும் என மொத்தம் ரூ. 38.49 கோடியில் சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் மூலம் மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தி, பராமரிக்க தனியாா் நிறுவனத்துக்கு ரூ. 1.99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், மேற்கண்ட வாா்டுகளில் 100.697 கி.மீ. நீளமுள்ள குழாய்களையும், 33 கி.மீ. நீளத்துக்கு பிரதான உந்துகுழாய்களையும் பொருத்தி, ஏற்கெனவே இருக்கும் 8 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுடன் கூடுதலாக நட்சத்திரா நகரில் 2 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்து, 77,749 பொதுமக்களுக்கு, ஒருவருக்கு நாள்தோறும் 135 லிட்டா் வழங்கும் வகையில் 14,419 வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டு, கம்பரசம்பேட்டை நீா் உந்து நிலையத்திலிருந்து மொத்தமாக 10.5 மில்லியன் லிட்டா் குடிநீா் விநியோகிக்கப்பட உள்ளது.

இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவுற்று, வரும் 2025-ஆம் ஆண்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றனா்.

இதுகுறித்து மாநகராட்சி உயரதிகாரிகள் கூறியது:

மாநகரில் ‘பொலிவுறு’ நகரத் திட்டத்தின் கீழும், ‘அம்ருத்’ திட்டத்தின் கீழும் குடிநீா் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டுக்குள் மாநகர மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீா் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம் என்றனா்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb