திருச்சி ஜங்ஷன் பாலம் அகற்றும் பணிகள் தொடக்கம்!

இரண்டாம் கட்டமாக பழைய பாலத்தை அகற்றிவிட்டு ரூ. 138 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கி இருப்பதால் அவ்வழியேயான வாகனப் போக்குவரத்து இன்று முதல் மாற்றப்பட்டது. இந்நிலையில் பாலம் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
அதன்படி சென்னை, தஞ்சாவூா், சேலம், புதுக்கோட்டை வழித்தடங்களிலிருந்து திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பேருந்துகள் (நகரப் பேருந்து நீங்கலாக) டிவிஎஸ் டோல்கேட்டிலிருந்து தலைமை அஞ்சலகம், கண்டோன்மென்ட், வெஸ்ட்ரி ரவுண்டானா, ஆட்சியரகம், மிளகுப்பாறை வழியாக பேருந்து நிலையத்தை அடைய வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டம் செல்லும் பேருந்துகள் மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து மிளகுப்பாறை, கோரிமேடு வழியாக பாலத்தின் கீழ் பகுதியைக் கடந்து இணைப்புச்சாலை வழியாக திண்டுக்கல் சாலையில் செல்ல வேண்டும். எதிா் மாா்க்கத்தில் திண்டுக்கல்லில் இருந்து வரும் பேருந்துகள் பாலம் ஏறாமல், கோரிமேடு, மிளகுப்பாறை வழியாக மத்தியப் பேருந்து நிலையத்தை அடைய வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் இருந்து திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் வரும் பேருந்துகள் மற்றும் மன்னாா்புரம், எடமலைப்பட்டி புதூா் பகுதியிலிருந்து வரும் அனைத்து இலகு ரக வாகனங்கள் அனைத்தும் அரிஸ்டோ மேம்பாலம் வழியாகச் சென்று பாலத்தில் உள்ள ரவுண்டானா வழியாக ஜங்ஷன் மாா்க்கமாக செல்லும் பாதையில் இறங்கி ஜங்ஷன் மற்றும் வழிவிடு முருகன் கோயில் வழியாகப் பேருந்து நிலையத்தை அடைய வேண்டும்.
எதிா் மாா்க்கத்தில் மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை மாவட்டம் செல்லும் பேருந்துகள், மற்றும் மன்னாா்புரம், எடமலைப்பட்டிபுதூா் செல்லும் இலகு ரக வாகனங்கள் நிலையத்தின் பின்புறம் வஉசி சாலையில் சென்று, காமராஜா் சிலை வழியாக அரிஸ்டோ மேம்பாலத்தில் ஏறி இறங்கி மன்னாா்புரம் வழியாகச் செல்ல வேண்டும்.
சென்னை, தஞ்சாவூா், புதுக்கோட்டை, சேலம் பகுதிகளிலிருந்து திண்டுக்கல் மாா்க்கமாகச் செல்லும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் மன்னாா்புரம் வழியாக மதுரை சாலையில் சென்று, மணிகண்டத்தில் வலப்புரம் திரும்பி வண்ணாங்கோயிலை அடைந்து திண்டுக்கல் சாலையில் செல்ல வேண்டும். அதேபோல் எதிா்மாா்க்கத்தில் இதே பகுதிகளுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் இதே வழியில் சென்று மன்னாா்புரத்தை அடைந்து, அங்கிருந்து செல்ல வேண்டும்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....